மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிவாரண நிதியுதவி உதவி வழங்கியுள்ளது.
சமீபத்தில் கடந்த 100 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு, கேரளாவில் தென்மேற்கு பருவமழை பொழிந்தது. இதனால் அணைகள் நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட்டதாலும், நிலச்சரிவுகள் ஏற்பட்டும் மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர்.
வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் கேரளாவுக்கு நிதியுதவி அளித்து வருகின்றன.
இந்நிலையில் கேரள மாநிலத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்கியுள்ளது.
தங்களது வெற்றியில் கேரள மக்களுக்கு எப்போதும் பங்கு உள்ளதாக கூறிய ஐக்கிய அரபு அமீரக துணை அதிபர், கேரளாவுக்கு உதவுவது தங்கள் கடமை என்று தெரிவித்தார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
வெள்ள பாதிப்புகளுக்கு ஐக்கிய அரபு எமிரேட் ரூ.700 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தக்க சமயத்தில் எமிரேட் செய்த உதவியை நாங்கள் என்றும் மறவமாட்டோம் என்றார்.




