2015-ம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி பூமியில் நீண்டநேரம் சூரிய ஒளி தெரியும் என்பதனால், அன்று உலக யோகா தினமாக ஐநா சபையினால் அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.
2015-ம் ஆண்டு டெல்லியில் நடந்த யோகாதினம் நிகழ்வில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கின்னஸ் சாதனை புரிந்தனர்.
இன்று 4-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் "அமைதிக்கான யோகா" ஆகும். இதையொட்டி, நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய ஆயுஷ் அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் வன ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சுமார் 55 ஆயிரம் பேருடன் யோகா பயிற்சியில் ஈடுபடுகிறார்.
பிரதமர் மோடி யோகா தினத்தையொட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
யோகா என்பது நமது முனிவர்கள், மனித குலத்துக்கு அளித்த விலைமதிப்பில்லாத பரிசு. அது, உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் உடற்பயிற்சிகளின் தொகுப்பு மட்டுமல்ல, நமது சுகாதார உத்தரவாதத்துக்கான பாஸ்போர்ட் ஆகும்.
மனதை ஒருமுகப்படுத்தி, மனவலிமை அளிக்கிறது. எனவே, உலக மக்கள் யோகாவை தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று இவ்வாறு பிரதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.




