தமிழக அரசின் முடிவைக் கேட்காமல் ஸ்டெர்லைட் விவகாரத்தில் எந்த உத்தவையும் பிறப்பிக்கக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1996-ம் ஆண்டு முதல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை இயங்கி வந்தது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் பொதுமக்கள் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அந்த பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தார்கள். பின்னர் போராட்டத்தின்போது வன்முறை வெடித்து, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இதனால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக முட தமிழக அரசு முடிவு எடுத்து அதற்கான அரசாணையை வெளியிட்டது.
இந்நிலையில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதால், இதனால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தால், தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.




