இன்று சென்னையில் நடைபெற்ற திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி, திமுக தலைவருமான கருணாநிதி உடல்நலக் குறைவுகளால் மறைந்தார். இதையடுத்து அவரது பதவியில் ஸ்டாலினை அமர்த்துவது என்று மூத்த நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
காலியாக இருந்த கட்சி தலைவர் பதவிக்கு ஞாயிற்றுக்கிழமையன்று மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின்.
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 9 மணியளவில் திமுக பொதுக்குழு கூடியது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் வாசித்த பிறகு பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
எனவே பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக ஸ்டாலினும், பொருளாலராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
திமுக தலைவராக ஸ்டாலின் வந்துள்ளதை திமுகவினர் தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். பெரியாரிடம் இருந்து பிரிந்து வந்து திமுகவை அண்ணாதுரை தொடங்கியபோது, அவருக்கு மதிப்பு கொடுத்து தலைவர் பதவியை காலியாக வைத்திருந்தார்.
அதன் பின்னர் கருணாநிதி தலைவரானார். அதைத் தொடர்ந்து தற்போது 2-வது தலைவராக அவரது மகன் ஸ்டாலின் பதவியேற்றுள்ளார்.




