இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயலால் தமிழகத்துக்கு வரும் 15-ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் புதிய புயல் ஒன்று உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயரிட்டுள்ளது. கஜா என்றால் யானை என அர்த்தமாகும். இந்த பெயரை இலங்கை அரசு பரிந்துரைத்துள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக மாறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இந்த புயல் நகரக் கூடும் எனவும், அடுத்த 3 நாட்களில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் 15-ம் தேதி வரை கஜா புயல் காரணமாக வங்கக் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைதிரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 14-ம் தேதி மாலை முதல் கனமழை பெய்யும் என்றும், அதே நேரத்தில் வரும் 15-ம் தேதி கஜா புயல் வலுவிழந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் கஜா புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.




